பழனியில் ஆடு, மாடுகளைக் கடித்துக் குதறிய சிறுத்தை - அச்சத்தில் மக்கள்
பழனி: பழனியில் மலையடிவார கிராமப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
பழனி அருகே உள்ள வடகாடு பகுதியின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கண்ணனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அங்குள்ளது. வடகாடு மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுபன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

காட்டு விலங்குகளில் மாடு, பன்றி உள்ளிட்டவை சில சமயங்களில் தோட்ட பகுதிக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும். எனவே இப்பகுதி விவசாயிகள் தோட்டங்களில் தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு பெரியசாமியின் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை புலி ஒன்று அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்தது. அவற்றின் அலறல் சத்தம் கேட்டு தோட்டத்து வீட்டில் இருந்த பெரியசாமி தீ பந்தத்துடன் அங்கு சென்றார். அவரை பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. சிறுத்தை கடித்ததில் ஒரு ஆடும், ஒரு மாடும் இறந்தன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தோட்ட வேலைகளுக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சப்படுன்றனர். எனவே அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications