தேர்தல்.. சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... சென்னை சாலைகள் "வெறிச்"!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டதால் சென்னையில் சாலைகள், போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் காரணமாக அனைத்து அலுவலகங்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை மக்களுக்கு கிடைத்துள்ளது.

தேர்தல் திருவிழா...
அதோடு, வேலை, கல்வி எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள், தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர்.

சிறப்பு பேருந்துகள்...
இதற்காக சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 700க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

சாலைகள் வெறிச்...
எனவே, சென்னை சாலைகளில் இருசக்கர வாகனங்களில் மற்றும் உள்ளூர் பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தேர்தல் ஆணையம்...
இந்தத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை நடத்திக் காட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications