சென்னையில் வெயிலுடன் சிலு சிலு சாரல் மழை.. சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ராயப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையின் மையப்பகுதிகளான ராயப்பேட்டை, போயஸ் கார்டன், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இன்று சென்னையின் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் குமரிக்கடல் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது வலுவிழந்து காற்றின் மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.
பெய்யென பெய்..
இந்த மேலடுக்கு சுழற்சி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் சிலு சிலு..
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது சென்னை ராயப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, போயஸ் கார்டன், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
மழையும் வெயிலும்..
சென்னை நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், இடை இடையே லேசான மழை பெய்து சென்னையை குளிர்வித்துள்ளது சாரல் மழை. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், பல இடங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.