உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாய்-மகன் பலியான சோகம்
உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நேற்றிரவு பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் தாய்-மகன் இருவரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கோடைக்கால வெயில் வாட்டி வதைத்து வருவதாலும், கூடவே அனல்காற்று அள்ளி வீசுவதாலும் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்றிரவும் கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வடமாவட்டங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு, வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் சூறை காற்றுடன் மழை கொட்டியது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதில், உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் சகுந்தலா என்பவரும், அவரது மகன் இளவரசன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரும் வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications