சசிகலா நிலைதான் டிடிவி தினகரனுக்கு வரப்போகிறது.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆரூடம்
இரட்டை இலை முடங்கியதை போல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுகவும் முடங்கி போய் விடுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு: இரட்டை இலை சின்னம் முடங்கியதை போல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை மக்களே முடக்கி விடுவர் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கி போகும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். அதிமுகவில் கோஷ்டி பூசலால் கண்ணுக்கு தெரிந்து 3 அணிகள் செயல்படுகின்றன. இன்னும் தெரியாமல் எத்தனை கிளம்ப உள்ளதோ?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை மக்களே முடக்கி விடுவார்கள். இந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றாலும் சட்டசபைக்கு போக முடியாது, அன்னிய செலாவணி வழக்கில் சிறைக்குத்தான் செல்ல முடியும். சசிகலாவை போல் தினகரனும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை நிச்சயம் வரும் என்றார் அவர்.