லிங்கா பிரச்சினை... தயாரிப்பாளர் சங்கத்தில் சமரசப் பேச்சு!
லிங்கா பிரச்சினையில் சமரசத் தீர்வு காண, தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர், பிச்சைப் போராட்டம் அறிவித்த லிங்கா விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தினர்.

லிங்கா படத்தை வெளியிட்டு, பெரும் கட்டணத்தை முதல் வாரத்தில் வசூலித்துக் குவித்த விநியோகஸ்தர்கள், நஷ்டக் கணக்கு காட்டியுள்ளனர்.
முதல் வாரம் முழுக்க பார்வையாளர்களிடம் ரூ 250 வரை டிக்கெட்டை வசூலித்த இவர்கள், இதுவரை அந்தக் கணக்கை காட்டாமல், ரூ 10 அல்லது அதற்கும் குறைவாக டிக்கெட் விற்றதாக கணக்கு காட்டியுள்ளனர் (மால்கள் விதிவிலக்கு).
இந்த அடிப்படையில் லிங்காவால் நஷ்டம் என்று கூறி ரூ 33 கோடி வரை திருப்பித் தரக் கோரி, ரஜினி வீட்டு முன் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
'இது ரஜினிக்கு எதிரான பக்கா பிளாக் மெயில்' என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டித்தனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் இறங்க முடிவு செய்து, கடுமையான எதிர்ப்பு அறிக்கைகள், போஸ்டர்கள் வெளியிட ஆரம்பித்தனர்.
இனியும் இந்த நிலை தொடரக்கூடாது என முடிவு செய்த ரஜினி, இதனை பேசி முடித்துவிடுமாறு திரையுலக அமைப்புகளிடம் கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நேற்று சமரச பேச்சு வார்த்தையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிச்சை எடுப்பு போராட்டம் அறிவித்த லிங்கா விநியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். லிங்கா தயாரிப்பாளர் ஆரம்பத்தில் அறிவித்த 10 சதவீதத்தைவிட இன்னும் சற்று கூடுதலாகத் தர சம்மதித்துள்ளார். ரூ 10 கோடி வரை இந்த நஷ்ட ஈடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
காரணம், தியேட்டர்களில் வசூலித்த உண்மையான தொகை எவ்வளவு என்பது திரையுலகின் அனைத்து தரப்பினருக்கும் தெரியும் என்பதால், விநியோகஸ்தர்கள் கேட்கும் தொகையைத் தர முடியாது எனக் கூறிவிட்டனர்.
திங்களன்று இறுதிப் பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications