'லிங்கா நஷ்டம்': உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு!
சென்னை: லிங்கா படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கோரி, உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லிங்கா படம் வெளியான நான்காம் நாளிலிருந்து அந்தப் படம் போதிய வசூலைத் தரவில்லை என்று கூறி வருகிறார்கள் திருச்சி - தஞ்சை பகுதியில் படத்தை வெளியிட்ட மெரினா பிக்சர்ஸ் நிர்வாகிகள்.
ஆனால் அந்தப் பகுதிகளில் படம் இன்னமும் 20 அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. 25-ம் நாள் விளம்பரமும் நேற்று வெளியிட்டார்கள். நான்காம் நாள் இந்தப் படம் 30 சதவீதம் மட்டுமே வசூலித்ததாகக் கூறிய இந்த நிறுவனம், 25 நாள் கடந்த பிறகும் அதே 30 சதவீதம்தான் தங்களுக்கு வந்ததாகக் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தை விசாரிக்கப் போவதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் இந்தப் பிரச்சினையை கிளப்பியுள்ளது அந்த நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் சார்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா' திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விநியோகிக்கும் உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக, திரையங்க உரிமையாளர்களிடம் இருந்து ரூ.8 கோடி வாங்கியிருந்தோம்.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை. இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என படத் தயாரிப்பாளரிடம் மனு அளித்தோம். அதற்கு பதில் இல்லை.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கவனத்தை ஈர்க்க கடிதம் எழுதினோம். அவரிடமிருந்தும் பதில் இல்லை.
இந்நிலையில், ‘லிங்கா' படத்தால் திரையங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி 10-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.
இதற்காக காவல்துறை அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, எங்களது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.