தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது.. என்ன செய்யப் போகிறோம்.. திருமாவளவன் வேதனை
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது. தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் மயமாகியுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நினைவு தினமான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ஊழல் மையமாக காட்சி அளிக்கிறது. எங்கு திரும்பினாலும் சாராயம் ஆறாய் ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றை முதலில் ஒழிக்க வேண்டும்.
இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தை தீய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றன. இதில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் பிரதமருக்கு அஞ்சுவது வேதனைக்குரியது. மத்திய அரசு தமிழக அரசில் தலையிடுவது கண்டனத்திற்குரியது.
கர்ணனுக்கு எதிராக அளித்த தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அரசியல் சட்ட விதியை மீறும் செயலாக மாறிவிடும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.