மதுக் கடை சூறை… வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு..
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கலிங்கபட்டியில் மதுவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது, 12 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதிமுகவினர் சனிக்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இதனால் மூடப்பட்ட கடை ஞாயிறன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
இந்நிலையில், டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக வைகோ பேசிக்கொண்டிருந்த போது ம.தி.மு.க தொண்டர் ஒருவர், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போலீசாரை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

மதுக்கடை சூறை
இதையடுத்து அங்கிருந்த மக்கள் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினார். போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

வைகோ காலில் காயம்
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் தாக்கியதால் தனது காலில் காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். வைகோவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

வைகோ குற்றச்சாட்டு
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை மாற்றிடும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக வைகோ குற்றம் சாட்டினார்.

52 பேர் மீது வழக்குப்பதிவு
இதனிடையே அரசு மதுபானக் கடையை சேதப்படுத்தியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாமுதீன் உள்ளிட்ட 52 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

வைகோ கைது இல்லை
வைகோ எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து கலிங்கப்பட்டியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம்மும் பரபரப்பும் ஏற்பட்டது. ஆனால் வைகோ கைது செய்யப்படவில்லை. அவர் தனது அலுவல்களை மதுரைக்கு கிளம்பிச் சென்று விட்டதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications