திருவாரூர் ரயில் நிலையத்தில், 20 குண்டுகளுடன் கேட்பாரற்று கிடந்த ரிவால்வர்!
திருவாரூர்: ரயில் நிலையத்தில் ரிவால்வர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரூவாரூர் ரயில் நிலையத்திலுள்ள, முதல் பிளாட்பாரத்தில் இன்று அதிகாலை 10 மணியளவில் ஒரு நீல நிற பை கிடந்துள்ளது. அதனை கண்ட துப்புரவு தொழிலாளி அதனை ரயில்வே போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
ரயில்வே போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 0.302 வகை ரிவால்வர் துப்பாக்கியும், லோடு செய்யப்பட்ட 6 குண்டுகளும், மேலும் 14 குண்டுகளும், ஆக மொத்தம் 20 குண்டுகளும் இருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை காவலர் பழனி (50) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
அவர் எதற்காக திருவாரூர் வந்தார், ரயில் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விட்டு சென்றது ஏன் அல்லது தீவிரவாதிகள் ஏதாவது சதிச் செயலுக்கு திட்டமிட்டு துப்பாக்கி, தோட்டாக்களை திருடி கொண்டு வந்து தவறுதலாக போட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்தான் கீவளூர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே பழனி மயங்கி கிடந்ததை அப்பகுதியில் சென்ற சிலர் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான் உண்மை வெளியே வந்தது.
பழனி லைசென்ஸ் பெற்று ரிவால்வர் வைத்திருந்துள்ளார். அந்த துப்பாக்கி 2002ம் ஆண்டு நாசிக்கில் தயாரிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு வரை லைசென்சுக்கான காலக்கெடு உள்ளது. பழனி தற்போது சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.
பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் சென்னை செல்வதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கம்பன் எக்ஸ்பிரசில் ஏறி உள்ளார். சாப்பிட்டுவிட்டு, ரயில் படிக்கட்டுக்கு அருகே நின்றபடி பயணித்தபோது, கீவளூர் அருகே எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். பழனி அவரது இருக்கைக்கு திரும்பி வராததை பார்த்த சக பயணி, திருவாரூர் ரயில் நிலையத்தில் அவரது பையை வீசியுள்ளார்.
இந்நிலையில்தான் அவரது பை துப்புரவு தொழிலாளியிடம் கிடைத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரங்களை கேட்ட பிறகு போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ரயில் நிலையத்தில், துப்பாக்கி கிடந்த சம்பவம் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications