திமுகவில் மாவட்ட செயலாளர்களாக சேலம் உமாராணி, தூத்துக்குடி கீதா ஜீவன் உட்பட 5 பெண்களுக்கு வாய்ப்பு?
சென்னை: திமுகவில் உள்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் யார் என்று எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் இடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
புதிய மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதில் தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை அனுசரித்து வழிநடத்தி செல்லக்கூடிய பண்பும், மக்கள் செல்வாக்கு உள்ள தலைமைப் பண்பும் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
அதே நேரத்தில் தேர்தல் மற்றும் போராட்டங்களை சந்திக்க கூடிய அளவிற்கு வலிமைமிக்கவராகவும், புதிய மாவட்ட செயலாளர்கள் இருக்க வேண்டும் என்பதையும் தி.மு.க. விரும்புகிறது. இன்று முதல் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.
கட்சிக்குள் கோஷ்டியை வளர்க்காமல் புதிய உத்வேகத்துடன் கட்சியை மேம்படுத்தி செல்லக்கூடிய திறமைமிக்கவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்குவதில் தலைமை முன்னுரிமை அளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் மாவட்ட செயலாளர்கள்
ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு பெண்களை நியமிக்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி நினைக்கிறாராம். தி.மு.கவில் கரூர் வாசுகி முருகேசனுக்குப் பிறகு பெண் மாவட்டச் செயலாளர்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்க ஐந்து மாவட்டங்களுக்கு பெண் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனராம். இது கருணாநிதி ஏற்கனவே ஸ்டாலினிடம் கூற அவரும் சம்மதம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை தமிழரசி
முன்னாள் அமைச்சர் தமிழரசி மதுரை புறநகர் தெற்கு பகுதிக்கு மாவட்ட செயலாளராக வாய்ப்பு உள்ளது என்கின்றனர். இவர் அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர். இப்போது ஸ்டாலின் விசுவாசியாக மாறியதால் பொறுப்பு கிடைக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இந்த பதவிக்கு சேடபட்டி முத்தையா, பொன். முத்துராமலிங்கம், எஸ்ஸார் கோபி என பலரும் முயற்சிப்பதாலும் அழகிரி அணியை சமாளிப்பாரா என்பதாலும் தமிழரசிக்கு தராமல் இருப்பதே நல்லது என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.
தூத்துக்குடி கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு மாவட்டச் செயலாளராக கீதா ஜீவன் நியமிக்கப்படலாமாம். ஒன்றுபட்ட தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் கீதாஜீவனின் அப்பாவுமான என்.பெரியசாமி தலையசைப்பதைப் பொறுத்து அவர் மாவட்டச் செயலாளர் ஆகலாம் என்கிறார்கள்.
திருவள்ளூர் காயத்திரி
திருவள்ளூர் மாவட்ட செயலாளராக காயத்ரி ஸ்ரீதரன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். கடந்த 2009-ம் ஆண்டு திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட இவர் தோல்வியைத் தழுவினார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், தேர்தல் சமயத்தில் வேலை பார்த்து தலைமையின் பாராட்டை பெற்றார். எனவே காயத்ரிக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆகும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.
கோவையில் மீனா?
ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் தற்போது நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக கோவை மாநகராட்சியில் கடந்த நான்கு முறையாகத் தொடர்ந்து கவுன்சிலராக இருக்கும் மீனா லோகநாதன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அண்மையில் கோவை மாநகராட்சிக் கூட்டத்தில், 'தண்டனை நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் படத்தை எப்படி நீங்க மாநகராட்சியில் மாட்டலாம்?' என்று சண்டையிட்டு ஜெயலலிதா படத்தை சேதப்படுத்தினார். இதற்காக தலைமையிடம் பாராட்டும் பெற்றுள்ளார். தவிர இவர் ஸ்டாலினின் தீவிர விசுவாசியாம். இருப்பினும் மீனா லோகநாதனுடன் போட்டியில் இருக்கும் வீரகோபாலுக்கே திமுக நிர்வாகிகள் ஆதரவு அதிகம் என்கின்றனர் கோவை உடன்பிறப்புகள்.
சேலம் உமாராணி
சேலத்தில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம் என்று பல கோஷ்டிகளுக்கு மத்தியில் அங்கே ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது சேலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட உமாராணிக்கு அந்த லக் அடிக்க வாய்ப்பு உள்ளதாம். இவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் தவிர லோக்சபா தேர்தலில் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால் உமாராணி மாவட்ட செயலாளர் ஆக்கப்பட்டலாம் என்கின்றனர்.
அதே நேரத்தில் சேலத்தில் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உமாராணிக்கு கொடுத்தால் நிச்சயம் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது திமுகவினர் கருத்து.
ஐந்தும் ஆதரவாளர்களுக்கே
பெண் மாவட்ட செயலாளர்களுக்கு சம்மதம் சொன்னாலும் ஐவரும் தனது ஆதரவாளர்களாவே இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின்.