ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய போராடும் இளைஞர்கள்.. உணவு, காபி, பிஸ்கட் வழங்கிய அலங்காநல்லூர் மக்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அலங்காநல்லூரில் குளிரையும் பொருட்படுத்தாமல் 20 மணிநேரத்திற்கும் மேலாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடிய விடிய தொடரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் உணவு, பிஸ்கட், காபி வழங்கினர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்த பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் திங்கள்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் இரவிலும் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காலை முதல் இரவு வரை உணவும் குடிநீரும் இல்லாது வாடிவாசல் அருகே அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்களுக்கு. இரவில் கிராம மக்களே உணவு சமைத்து கொடுத்தனர். நள்ளிரவை தாண்டியும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அவர்களுக்கு போராட்டக்களத்திலேயே சுக்குக்காப்பி, பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவை ஊர்மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.
அந்த இளைஞர் கூட்டத்துடன் கிராம மக்களும் இணைந்து கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரவை கழித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்களின் அமைதிவழிப் போராட்டத்தை தடுக்க முடியாத போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications