மோடி அலை இல்லை என்று சொன்னீர்களே மன்மோகன் சிங், கருணாநிதி!
சென்னை: மோடி பிரதமர் ஆகப் போகிறார். இந்நிலையில் நாட்டில் மோடி அலையே வீசவில்லை என்று கூறிய தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.
பாஜக நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று தெரிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்க்கையில் மோடி அலை அல்ல சுனாமி வீசியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மோடி அலையே வீசவில்லை என்று கூறிய தலைவர்கள் தற்போது என்ன செய்வார்கள். அவ்வாறு கூறிய தலைவர்கள் யார், யார் என்று பார்ப்போம்.
மன்மோகன் சிங்
மோடி அலை என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது மீடியாக்களால் உருவாக்கப்பட்டது. நாங்கள் பெரும்பான்மையுடன் வெல்வோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
கருணாநிதி
மோடி அலை எல்லாம் நான் பார்க்கவில்லையே என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
கெஜ்ரிவால்
நாட்டில் மோடி அலை வீசவில்லை என்று பஞ்சாபில் பிரச்சாரம் செய்கையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
முரளி மனோகர் ஜோஷி
மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளர். அவர் கட்சி ஆதரவுடன் செயல்படுகையில் அவருக்கு ஆதரவு கிடைக்கத் தான் செய்யும். அவருக்கு கட்சி, பல சமூகங்கள் மற்றும் பாஜக தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதை நீங்கள் மோடி அலை என்று கூறினால் கூறிக் கொள்ளுங்கள் என்றார்.
குமார் விஷ்வாஸ்
அமேதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஷ்வாஸ் கூறுகையில், இது யாருடைய அலை என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆம் ஆத்மிக்கு(பாமர மக்களுக்கு) சேவை செய்ய வேண்டும் என்றார்.
லாலு
எங்குமே மோடி அலை இல்லை. மோடி ஒரு இடத்திற்கு வந்தால் இந்த மோடி தான் கலவரத்தின்போது பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தவரா என்பதை பார்க்க மக்கள் வருகிறார்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
நக்மா
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான நடிகை நக்மா கூறுகையில், மோடி அலை வீசுவதாக பாஜக தான் கூறுகிறது. ஆனால் அப்படி ஒரு அலையும் இல்லை. அப்படி ஒரு அலை வீசினால் மோடி தங்கள் கட்சி கடந்த 35-40 ஆண்டுகளாக வெற்றி பெறாத தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்றார்.
முலாயம்
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவும், மோடி அலை என்று எதுவும் இல்லை என தெரிவித்தனர்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், அரசு அமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. மீடியா கூறுவது போன்று மோடி அலை வீசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்கள் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்றார்.