லோக்சபா தேர்தல்: திரிதியை நாளில் பிரச்சாரம் தொடங்கிய அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது பிறந்தநாளன்று அறிவித்தார்.
அதோடு மட்டுமல்லாது திரிதியை நாளான திங்கட்கிழமையன்று காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதே நாளில் மாலை 3 மணி அளவில் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கட்சியின் தலைமை அறிவுறுத்தியிருந்தது.
அதற்கேற்ப தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

சங்கரன்கோவிலில் வசந்தி முருகேசன்
தென்காசி தொகுதி வேட்பாளர் வசந்தி முருகேசன் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் நகரில் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர், சங்கரன் கோவிலில் இருக்கும் முப்பிடதி அம்மன் கோவிலில் திங்கட்கிழமை 3.30 மணி அளவில் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
அவருடன் அறநிலையத்துறை அமைச்சரான செந்தூர் பாண்டியன், தொகுதி பொறுப்பாளர் மனோஜ் பாண்டியன் உடன் பங்கேற்றனர்.இந்த தொகுதி மக்களுக்காக வேண்டுவதை செய்வேன். அவர்கள் எந்த நேரமும் அணுகலாம் என்றார் வசந்தி முருகேசன்.

விநாயகர் கோவிலில் வேட்பாளர்கள்
நெல்லை வேட்பாளர் பிரபாகர் நெல்லை டவுன் ஈசானவிநாயகர் கோவிலில் இருந்தும் பிரச்சாரத்தை தொடங்கினார். அதேபோல தஞ்சாவூர் வேட்பாளர் பரசுராமன் சென்டிமென்டாக பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். கடந்த பிப்ரவரி 24ந் தேதி இந்த கோயிலில் அன்னதானம் செய்து கொண்டிருந்த போதுதான் ஜெயலலிதா தனக்கு சீட் அறிவித்தார் என்று இந்த கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

யோகநரசிம்மர் ஆலயத்தில் மதுரை வேட்பாளர்
மதுரை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன் திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் முன்பு இருந்து பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசார தொடக்க விழாவில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி தொடக்கிவைத்தார்.

ராமேஸ்வரத்தில் அன்வர் ராஜா
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்பிருந்து நேற்று பிரசாரத்தைத் தொடங்கினார். நகரின் முக்கிய வீதிகளில் பிரசாரம் செய்து விட்டு, மீனவர் கிராமமான ஓலைக்குடாவிற்கு ஆதரவு கேட்டு சென்றார்.
அப்போது, கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண்கள் தங்கள் பகுதிக்கு குடி தண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டி பிரசாரம் செய்ய சென்ற வேட்பாளரின் காரை முற்றுகையிட்டனர்.

மீனவர்களிடம் மோதிய அன்வர்ராஜா
இதனால் வெறுப்படைந்த அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜா, ''நீங்கள் எனக்கு ஓட்டே போட வேண்டாம். உங்கள் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்' என ஆவேசமாக கூறிவிட்டு, வேகமாக வெளியேறினார்.

அருணாச்சலேஸ்வர் கோவிலில் வனரோஜா
திருவண்ணாமலை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் மாலை 3 மணிக்கு திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வேட்பாளர் வனரோஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.

சென்னை வேட்பாளர்கள் சுறுசுறுப்பு
திருவள்ளூரில் (தனி) டாக்டர் பி.வேணுகோபாலும், வடசென்னை யில் டி.ஜி.வெங்கடேஷ்பாபுவும், தென்சென்னையில் டாக்டர் ஜெ.ஜெயவர்தனும், மத்திய சென்னையில் எஸ்.ஆர்.விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் கே.என்.ராமச்சந்திரனும், காஞ்சீபுரத்தில் (தனி) மரகதம் குமரவேலும், அரக்கோணத்தில் கோ.அரியும், வேலூரில் பா.செங்குட்டுவனும், கிருஷ்ணகிரியில் கே.அசோக்குமாரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மக்களை சந்தித்த வேட்பாளர்கள்
இதேபோல், தருமபுரியில் பி.எஸ். மோகனும், ஆரணியில் சேவல் வெ.ஏழுமலையும், விழுப் புரத்தில் (தனி) எஸ்.ராஜேந்திர னும், கள்ளக்குறிச்சியில் டாக்டர் க.காமராஜூம், சேலத்தில் வி.பன்னீர்செல்வமும், நாமக்கல்லில் பி.ஆர்.சுந்தரமும், ஈரோட்டில் எஸ்.செல்வக்குமார சின்னையனும், திருப்பூரில் வி.சத்தியபாமாவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

40 தொகுதிகளிலும் விறுவிறுப்பு
மேலும், நீலகிரியில் (தனி) டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனும், கோவையில் ஏ.பி.நாகராஜனும், பொள்ளாச்சியில் சி.மகேந்திரனும், திண்டுக்கல்லில் எம்.உதயகுமாரும், கரூரில் டாக்டர் மு.தம்பிதுரையும், திருச்சியில் ப.குமாரும், பெரம்பலூரில் ஆர்.பி.மருதைராஜூம், கடலூரில் ஆ.அருண்மொழிதேவனும், சிதம்பரத்தில் (தனி) மா.சந்திரகாசி யும், மயிலாடுதுறையில் ஆர்.கே.பாரதி மோகனும், நாகப்பட்டினத்தில் (தனி) டாக்டர் கே.கோபாலும், நேற்று பிரச்சாரத்தை தொடங்கினர்.

தேனி பார்த்தீபன்
சிவகங்கையில் பி.ஆர்.செந்தில்நாதனும், தேனியில் ஆர்.பார்த்திபனும், விருதுநகரில் டி.ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் அ.அன்வர்ராஜாவும், தூத்துக்குடியில் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும், கன்னியாகுமரியில் டி.ஜாண்தங்கமும், புதுச்சேரியில் எம்.வி.ஓமலிங்கமும் பிரச்சாரத்தை தொடங்கினர்.

பிரதமராக வாய்ப்பு தாருங்கள்
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவருமே வாக்களார்களை சந்திக்கும் போது ஜெயலலிதா பிரதமராக வாய்ப்புத் தாருங்கள் என்று கூறியே வாக்குகளை சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications