பெண் போலீசுக்கு போன் செய்து செக்ஸ் டார்ச்சர்: வாலிபரை வளைத்துப் பிடித்து கைது செய்த போலீஸ்
சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபரைப் பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர் போலீசார். கண்ட மேனிக்கு கொச்சை கொச்சையாக பேசிய வாலிபர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். லாரி கிளீனரான இவர் கடந்த சில மாதங்களாகவே போலீஸ் கட்டுப்பாட்டு அறை பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போதெல்லாம், பெண்களின் அங்க அடையாளங்களை சொல்லி பன்னீர் செல்வம் அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். நேற்று இரவும் 9 மணிக்கு வழக்கம் போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண்களிடம் பேசக்கூடாத வார்த்தைகளையெல்லாம் பெண் போலீசிடம் அள்ளி வீசியிருக்கிறார்.
இப்படி எல்லை மீறி பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்த அவர், உச்சக்கட்டமான ‘செக்ஸ்' வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன போலீசார், பன்னீர் செல்வத்தின் ‘‘கெட்ட வார்த்தை''களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இது பற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன், எழும்பூர் போலீசில் புகார் செய்தார். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் கடந்த 7 மாதங்களில் பன்னீர் செல்வம் 1041 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் அவர் மீது பாய்ந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பன்னீர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கே செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார் இந்த வாலிபர்.












Click it and Unblock the Notifications