அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்...குழந்தை உள்பட 5 பேர் பலி...
திருநெல்வேலி : ஆலங்குளம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாயினர்
திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு தென்காசி நோக்கி சென்றது. இரவு சுமார் 10 மணியளவில் ஆலங்குளத்தை கடந்து பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த லாரி அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசுப் பேருந்து பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கோவிந்தபேரியை சேர்ந்த தூரியம்மாள், தென்காசியை சேர்ந்த கோமு, கீழப்பாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் வெள்ளப்பாண்டி, தென்காசி ஆயிரப்பேரியை சேர்ந்த சிவா மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் பலியாயினர்.
10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.