திருச்சியில் ஐ.ஜி. அலுவலகம் அருகே நின்ற அதிமுக நிர்வாகியின் லாரி அபேஸ்
திருச்சி: திருச்சியில் காவல்துறை ஐ.ஜி. அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட அதிமுக நிர்வாகியின் லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பாசறை துணைத் தலைவராக பதவி வகித்து வருகின்றார். அவர் லாரி மூலம் போக்குவரத்து தொழில் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று சுப்ரமணியபுரம் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து அவர் தனது அலுவலக ஆட்கள், கட்சி தொண்டர்கள் மூலம் லாரியை திருச்சி முழுக்க வலை வீசி தேடினார். ஆனால் லாரி கிடைத்தபாடு இல்லை.
இதையடுத்து அவர் இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியையும், அதை திருடிச் சென்ற மர்ம நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.