லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை கிடுகிடு.. என்னத்த சமைக்கிறது.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.
சென்னை: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்வது, இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மத்திய, மாநில அரசுகள் வருவாயை இழந்துள்ளன.

பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் நடைபெற்ற நாளே போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து அண்மையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசுடன் கலந்து பேசி தீ்ரவு காணப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

போராட்டம் வாபஸ்
இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளதால் போராட்டத்தை தமிழக அளவில் வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனினும் 40 சதவீதம் உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணம் குறித்து ஹைதராபாதில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது. இதனால் 6 மாநில அளவிலான ஸ்டிரைக் என்பதால் தமிழகம் மட்டும் வாபஸ் பெற முடியாது என்று அறிவித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

சரக்குகள் தேக்கம்
இந்நிலையில் கோடிக்கணக்கான மதிப்பிலான சரக்குகள் லாரிகளில் தேங்கியுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 8-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கும் என அகில இந்திய அளவிலான லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

காய்கறிகளின் விலை விர்...
6 மாநில அளவிலான லாரிகளின் வேலை நிறுத்தம் இன்று 7-ஆவது நாளை எட்டியது. இதைத் தொடர்ந்து ஆங்காங்கே லாரிகள் நின்று கொண்டு சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாலும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறிகளின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications