மெரினாவில் மாணவர் போராட்டம்? 2-வது நாளாக போலீசார் குவிப்பு- தீவிர கண்காணிப்பு!
சென்னை மெரினா கடற்கடையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீஸ் கண்காணிப்பு தொடர்கிறது.
சென்னை: மெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீஸ் கண்காணிப்பு நீடிக்கிறது. அதிவிரைவு மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப்புரட்சியை போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் நேற்றுக் காலை முதல் தகவல் பரவியது.

இதையடுத்து அங்கு இளைஞர்கள் திரள்வதை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக செல்பவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசாரின் கெடுபிடியால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இளைஞர்கள் திரண்டுவிட்டால் அவர்களை கலைப்பது கடினம் என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications