தாராசுரம் கோவில் மொட்டைக் கோபுரத்தில் 2 நாட்களாக.. பதுங்கியிருந்த காதல் ஜோடி!
தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்தில் 2 நாட்களாக பதுங்கியிருந்த காதல் ஜோடியை பொதுமக்கள் மீட்டனர்.
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்தில் 2 நாட்களாக பதுங்கியிருந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. சோழர் காலத்துக் கோவில் இது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கோவிலாகும் இது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்தக் கோவிலின் முன்புறம் ஒரு மொட்டைக் கோபுரம் உள்ளது. அது சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டிப் போய்க் கிடக்கிறது. பல வருடமாகவே இப்படியேதான் உள்ளது இந்த மொட்டைக் கோபுரம். இங்கு சமூக விரோதிகள் நடமாடுவதாகவும் புகார்கள் உள்ளன.
இருளில் இரு உருவங்கள்
இந்த மொட்டைக் கோபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு இரவு இருவர் நடமாடியுள்ளனர். அதில் ஒருவரது உருவம் பெண் போலத் தோன்றியதை சிலர் பார்த்துள்ளனர். இருளில் அவர்களது உருவங்கள் சரியாக தெரியவில்லை. இதையடுத்து சிலர் ஒன்று கூடி யார் அது என்பதை அறிய மொட்டைக் கோபுரத்தில் தேடுதல் வேட்டையில் குதித்தனர்.
மர்ம நடமாட்டம்
ஆனால் கோபுரத்தில் எங்குமே உருவம் சிக்கவில்லை. கோவில் பிரகாரம் முழுவதும் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கிழக்கு கோபுரப் பகுதியிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அங்கு விரைந்தனர்.
நடுங்கியபடி காதல் ஜோடி
அங்கு போய்ப் பார்த்தபோது நடுங்கிய நிலையில் இளம் பெண்ணும், ஆண் ஒருவரும் இருந்தனர். பொதுமக்கள் அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதை விட பெரிய அதிர்ச்சியில் அந்த ஜோடி நின்றிருந்தது. இருவரையும் மீட்டு அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர் பொதுமக்கள்.
20 வயசு
இருவருக்கும் 20 வயதுக்குள்தான். அந்தப் பெண்ணுக்கு 19 வயதாகிறதாம். ஆணுக்கு 20 வயது. அப்பெண் தாராசுரத்தைச் சேர்ந்தவர். வாலிபர் கும்பகோணம். காதலித்து வந்துள்ளனர். 2 நாட்களாக இந்த மொட்டை கோபுரத்தில் பதுங்கியிருந்துள்ளனர்.
விரைந்து வந்த பெற்றோர்
இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி மக்களே தகவல் கொடுத்தனர். ஆனால் மக்கள் அசந்திருந்த நேரம் பார்த்து இருவரும் தப்பி விட்டனர். இருப்பினும் பொதுமக்கள் வலை வீசித் தேடி பஸ் நிலையப் பகுதியில் வைத்து அவர்களைப் பிடித்தனர். பின்னர் அப்பெண்ணின் பெற்றோர் வந்து மகளை மீட்டுச் சென்றனர். அந்த வாலிபரின் கதி என்ன என்பது தெரியவில்லை.