லோக்சபா தேர்தல்: திமுகவுக்கு அருந்தமிழர் முன்னேற்றக் கழகம் ஆதரவு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க உள்ளதாக அருந்தமிழர் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அருந்தமிழர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தபோது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. திமுகவை வெற்றி பெற வைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மென்மேலும் உயரும்.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய மூலகாரணமே தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவர் ஒருவரால் மட் டுமே இடஒதுக்கீட்டினை சீர்செய்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.
சென்ற திமுக ஆட்சியின்போது எங்கள் இனமான அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடாக 3 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இந்த உள் இடஒதுக்கீட்டின் மூலம் எங்கள் இன மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளார்கள்.
மேலும், எங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி தர வலியுறுத்துவோம். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் எங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டினை உயர்த்தி தர முடியும் என நம்புகின்றோம்.
எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு எங்கள் கட்சி அயராது பாடுபடும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.