தனித்து போட்டி.. படுதோல்வி பயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்!
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட தமிழக காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட தமிழக காங்கிரஸ் விரும்புகிறது. இதையடுத்து அதற்கான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி துவங்கியுள்ளது.
தேர்தலையொட்டி கடந்த மாதம் விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சி பெற்றது. 830 மனுக்கள் பெறப்பட்டன. அதை 25 பேர் கொண்ட குழு பரிசீலித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது.

வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலை குலாம் நபி ஆசாத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பரிசீலித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

திமுகவுக்கு தூது
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையாததால் திமுகவுடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் கூட்டணி தொடர்பாக திமுகவுக்கு தூதுவிடப்படுகிறது. தூதுவிடும் பணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஸ்டாலின் பிறந்தநாள்
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடந்த 1ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் கே.வி. தங்கபாலு, பீட்டர் ஆல்போன்ஸ் ஆகியோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நம்புகிறார்கள்.

ராகுல்
ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகத்திற்கு வருகிறார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனித்து போட்டியா?
தமிழகத்தில் பெரிய கூட்டணி அமையாத பட்சத்தில் தனித்து போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தயங்குகிறார்கள். ஒரு வேளை தனித்து போட்டியிட்டு தோற்றுவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுகிறார்களாம். இதனால் வேறு மாநிலங்களில் இருந்து மேல்சபைக்கு உறுப்பினராகத் தேர்வாகிவிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களாம்.

வாக்கு வங்கி
காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறும் தொகுதிகள் என்று கருதப்படும் நெல்லை, மயிலாடுதுறை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி குறைந்துள்ளதாம். அதனால் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்.

தமிழக கட்சிகள்
இலங்கை தமிழர் விவகாரம், ராஜீவ் கொலையாளகிளை விடுவிப்பதில் மத்திய அரசின் நிலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை நினைத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயங்குகின்றன என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications