தேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி!!
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் 11 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க சில காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர். ஆனால் தி.மு.க. உடன்படவில்லை. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. கூட்டணி அமையாததால் முன்னணி தலைவர்கள் ப.சிதம்பரம்,தங்கபாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடாமல் விலகினர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதியிலும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.
ஞானதேசிகனுக்குப் போர்க்கொடி
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தோல்விக்கு பொறுப்பு ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
படு கேவலமான தோல்வி
இது குறித்து இன்று அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் அகில இந்திய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்குக் காரணம் என்ன? தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரிவர செயல்படவில்லை.
கூட்டமே போடவில்லை
மற்ற கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முறையாக காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கூட்டம் போடவில்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக் கூட்டம் கூட நடத்தவில்லை.
நோகடித்த ஞானதேசிகன்
தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை. அகில இந்திய தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில் கூட பாரபட்சமாக நடந்து கொண்டு அவர்களை நோகடித்தது.
இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கு முழுப் பொறுப்பும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத்தான் சேரும்.
விவேகமான தலைவர் தேவை
இனி, தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரசில் விவேகமாகச் செயல்படுகின்ற ஒரு தலைமையைத் தான் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இத்தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஞானதேசிகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.