அழகிரி பிறந்தநாளில் மதுரையை கலங்கடிக்க ஸ்டாலின் ஆதரவாளர்கள் திட்டம்
மதுரை: மதுரையைக் கைப்பற்ற திமுகவில் எழுந்துள்ள சகோதரச் சண்டை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
சாதிய வன்கொடுமைச் சட்டப் பிரிவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது அழகிரி ஆதரவாளர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் பதிலுக்கு அவர்களும், அழகிரி ஆதரவாளர்களை சிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
போஸ்டர் யுத்தத்தினால் எழுந்த கலகக்குரல் மதுரையை முற்றிலும் கலகலக்க வைத்தது. மாநகர் நிர்வாகிகளை முற்றிலும் கலைத்துவிட்டு 6 பேர் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கைது, அழகிரி பிறந்தநாள் விழா என மறுபடியும் ஒரு பூகம்பத்தை எதிர்நோக்கியுள்ளது மதுரை.

அழகிரி சந்திப்பு
திமுகவில் எழுந்துள்ள சகோதரச் சண்டையினால் கட்சியிலும், மதுரையிலும் போராட்டமே எழுந்துள்ள நிலையில் அழகிரி - கருணாநிதி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தைப்பொங்கலுக்கு முதலில் கோபாலபுரம் சென்ற அழகிரி கருணாநிதியை சந்திக்காமலேயே திரும்பினார். மறுமுறை சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்.
தேர்தல் அறிவிப்பு
மதுரை மாவட்டத்திற்கான உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 19 நடைபெறும் என்று கட்சி அறிவித்த உடனே தயா மகாலில் அழகிரி ஆதரவாளர்கள் கூடி பேசினர். அங்கு வந்த அழகிரி நான் இருக்கும் யாரும் எதற்காகவும் கவலைப்படவேண்டாம் என்றார்.
நீயா நானா போட்டி
அனைத்து வார்டுகளுக்கும் போட்டி போடுங்கள், அவங்களா? நாமளான்னு என்று பார்த்துவிடுவோம் என்று கூறிவிட்டு ஜனவரி 19ல் மீண்டும் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துள்ளார் அழகிரி.
அப்போது அழகிரி மதுரையில் நடைபெறும் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி பேசியுள்ளார். தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
வேட்புமனு தாக்கல்
100 வார்டுகளின் வட்டச் செயலாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் பல கலாட்டக்களுக்கு இடையே நடைபெற்றது. தொடர்ந்து தேர்தல் விளம்பரங்கள் செய்யவும், சுவரில் இடம்பிடிக்கவும் எழுந்த போட்டியே இப்போது அனலாக கொதிக்கத் தொடங்கியுள்ளது.
சாதிய வன்கொடுமை சட்டம்
அழகிரி ஆதரவாளர் மாடக்குளம் கண்ணன் என்பவர் விளம்பரம் வரைந்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஸ்டாலின் ஆதரவாளர் முன்னாள் மேயர் குழந்தை வேலு, முன்னாள் பகுதிச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் சாதியைச் சொல்லி திட்டியதாக புகார் கூறி வழக்கும் போடப்பட்டுள்ளது.
முறையிட்ட ஸ்டாலின்
இந்த புகார் குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் முறையிடவே ஜனவரி 19ம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்டார் அழகிரி என்கின்றனர் ஒரு தரப்பினர்.
சந்தித்த அழகிரி
கோபாலாபுரம் வந்த அழகிரி, கருணாநிதியிடம் 15 நிமிடம் பேசியுள்ளார். அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களை மீண்டும் சேர்க்கவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. உட்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பழிவாங்கப்பட்டதையும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் செய்த முறைகேடுகளையும் கூறிவிட்டு மறுநாள் ஹாங்காங் பறந்துவிட்டார்.
எதிர் புகாருக்கு ரெடி
இதனிடையே எஸ்.டி, எஸ்.சி புகாருக்கு ஆளாகி இருக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தால், அவர்கள் பாணியில் புகார் கொடுக்க சென்னையில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
அழகிரி பிறந்தநாள்
ஜனவரி 30 தேதி அழகிரி பிறந்தநாள் எப்போதுமே அதகளமாகவே இருக்கும். இந்தமுறை எதிர் கோஷ்டியில் இருப்பவர்கள் சிக்கல்களை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போது எச்சரிக்கையோடு செயல்பட ஆரம்பித்துள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications