திமுகவில் மீண்டும் இணைகிறார் மு.க.அழகிரி?.... ஜனவரி 30ல் முக்கிய அறிவிப்பு!!
சென்னை: திமுகவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வரும் ஜனவரி 30ம் தேதியன்று மீண்டும் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைக்கும் பணியும் ஒருபுறம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்வது என்னவென்றால், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ஜனவரி 30ம் தேதி அதாவது அழகிரியின் பிறந்தநாளன்று அவர் திமுகவில் மீண்டும் இணைந்து அதற்கான போஸ்டர்களும் ஒட்டப்படும் என்பதாக உள்ளது.

தேர்தலை முன்னிட்டு
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதிதான் இதற்கான வேலைகளை துவக்கியதாகவும் கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் திமுகவை பலப்படுத்துவதற்காக இந்த முடிவை கருணாநிதி எடுத்திருப்பதாகவும், இது குறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் குறிப்பாக ஸ்டாலினிடம் கருணாநிதி எடுத்துக் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

திமுகவும் மு.க. அழகிரியும்
சென்னையில் இருந்து, முரசொலி பதிப்பை கவனிப்பதற்காக மதுரை வந்தவர் அழகிரி. பொன்முத்துராமலிங்கம், காவேரிமணியம், உள்ளிட்ட மூத்த பிரமுகர்களிடம் மட்டும், முதலில் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில், மதுரையில் பிரதமர் இந்திராவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டபோது, கருணாநிதி உட்பட தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் முதன் முதலாக பங்கேற்றார் அழகிரி.

1996ல் அழகிரி
ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவுக்கு வந்து 1996ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அழகிரியின் செல்வாக்கு திமுகவில் அதிகரித்தது. கட்சியிலோ ஆட்சியிலோ எந்த பதவியில் இல்லாத போதும் மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தினார் அழகிரி.

அதிமுகவின் வெற்றி
உள்கட்சிப் பிரச்சினையில் 2001ம் ஆண்டு கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட போது, திமுகவிற்கு எதிராக செயல்பட்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தார். கருணாநியின் நள்ளிரவு கைது... இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வைத்தது.

அஞ்சா நெஞ்சன்
2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியே அழகிரியை 'அஞ்சா நெஞ்சன்' என்று புகழ்ந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அழகிரி பிறந்தநாளில் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி, வாழ்த்தினார்.

தென் மண்டல அமைப்புச் செயலாளர்
தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட போது தென்மாவட்டங்களில் பெரும்பான்மையான திமுக நிர்வாகிகள் அழகிரியுடன் இருந்தனர். 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தென்மாவட்டங்களில், தி.மு.க., கூட்டணிக்கு 9 தொகுதிகள் கிடைத்தன.

மத்திய அமைச்சர் பதவி
இதனால் கட்சியில் இவருக்கு தனிமரியாதை கிடைத்தது. ஸ்டாலினுக்கு இணையாக கட்சியில் வளர்ந்த அழகிரி, மாநில அரசியலில் தலையிடாமல் இருக்கவே மத்திய அமைச்சராக்கப்பட்டார். அமைச்சரான பின், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் அரசியலில் இருந்து பின்வாங்க துவங்கினார் அழகிரி.

உட்கட்சி கலகம்
கட்சியின் அடுத்தக்கட்ட தலைவருக்கான பதவிப்போட்டியில், சகோதரர் ஸ்டாலினுடன் முறுக்கிக்கொண்டு அவர் மேற்கொண்ட சில செயல்கள் கட்சிக்குள்ளும், அவரது குடும்பத்தினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்த, கட்சித்தலைவர் கருணாநிதியின் துணிச்சலான முடிவால் கட்டம் கட்டப்பட்டார். கொஞ்ச நாள் தனி ஆவர்த்தனம் செய்தவர், காலையில் ரஜினி, மாலையில் சோனியா, நள்ளிரவில் தனது ஆதரவாளர்கள் என பல சந்திப்புகளை நடத்தினார்.

தோல்வியை தழுவிய திமுக
2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு அழகிரி செய்த உள்ளடி வேலைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமல்ல என்று கருணாநிதியே சொல்லும்படியானது. கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டாலும் வெளிநாடுகளில் பயணம், உள்ளூர் தொண்டர்களின் விழாக்களில் பங்கெடுப்பது என இயல்பாக இருக்கிறார் அழகிரி.

மீண்டும் அழகிரி
திமுகவிற்குள் மீண்டும் அழகிரியை நுழைத்து, தொண்டர்கள் புடைசூழ தென்மண்டல தளபதியாக உலா வரவழைக்கவேண்டுமென்ற சகோதரி செல்வி, சகோதரர் தமிழரசு, பேராசிரியர் அன்பழகன், கவிஞர் வைரமுத்து என அத்தனை பேர் மல்லுக்கட்டியும் ஸ்டாலின் மட்டும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

முடிவுக்கு வரும் சகோதரச்சண்டை
திமுக தலைவர் கருணாநிதியோ, தென் தமிழகத்தில் அழகிரி பிரிவால் திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து ஸ்டாலினுக்கு எடுத்துக் கூறியுள்ளாராம். சகோதரர்களுக்குள் ஏற்படும் சண்டையால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதையும், அழகிரியின் இணைப்பால் ஏற்படும் நன்மைகளும், பிரிந்து இருந்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மெல்ல எடுத்துச் சொல்லப்பட்டது. பிறகே, இந்த விஷயத்தில் கருணாநிதியின் முடிவுக்கே விட்டு விடுவதாகக் கூறியிருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்துக்குள் அழகிரியின் ரீ-என்ட்ரி முடிவாகிவிடும் என்றும் முக்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஜனவரி 30ல் அறிவிப்பு
இன்னும் சில தினங்களில் அழகிரியின் 65வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அழகிரியை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சீன அதிபர் என வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் வாழ்த்தும்! போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன. கலகக்குரலை ஏற்படுத்தும் போஸ்டர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிரியின் பிறந்தநாளை மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பிறந்தநாளை அழகிரி மதுரையில் கொண்டாடப் போவதில்லை என்றும் அவர் சென்னையில் கோபாலபுரத்தில் இருப்பார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளியில் சந்திப்பு
சில காலமாக எந்த வித கொண்டாட்டங்களும் நடக்காமல் இருந்த அழகிரியின் வீட்டில் கடந்த சிலமாதங்களாக தொண்டர்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். தீபாவளி நாளில் தொண்டர்களை சந்தித்த அழகிரி தை திருநாளில் மீண்டும் சந்தித்தார்.

தை திருநாளில் கொண்டாட்டம்
திமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கடந்த 6 மாதகாலமாகவே கோரிக்கை வைத்து வருகிறார்களாம். இதற்கான முன்னோட்டமாகவே தை பொங்கல் நாளில் அழகிரியின் வீட்டின் முன்பு ஆட்டம் பாட்டம் என்று அமர்களப்படுத்திவிட்டார்களாம்.

ஆதரவாளர்கள் நம்பிக்கை
இந்த ஆண்டு அழகிரியின் பிறந்தநாளை ஒட்டிய நலத்திட்ட உதவிகளை அவரது மகன் துரை தயாநிதி வழங்குவார் என்றும் அழகிரிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ ஆழகிரியின் 65வது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருக்கின்றனர் அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள். அண்ணனுக்கு தலைமையில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது. விரைவில் அவர் கட்சிப்பணி ஆற்ற வருவார்' என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications