சொத்து விவரத்தை மறைத்த புகார்: மு.க.அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு!
மதுரை: சொத்து விவரத்தை மறைத்ததாக மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த தலத்தான்குடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளித்தார். அதில், ''முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.

அதில் அவருக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட காட்டூரில் உள்ள பல ஏக்கர் நிலத்தை மறைத்து விட்டார்" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து திருவாரூர், மதுரை ஆட்சியர்கள் விசாரணை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்பேரில் திருவாரூர் ஆட்சியர் விசாரணை நடத்தி, மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைத்தார். அதன்பேரில் மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன், மதுரை 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அழகிரி மீது தனிநபர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications