மதுரை திரும்பினார் மு.க.அழகிரி – விஏஓ மீதான தாக்குதல் வழக்கில் ஆஜராக முடிவு
மதுரை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தனது மகன் தயாநிதி அழகிரி வீட்டில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் 16 ஆம் தேதி மு.க.அழகிரி ஆஜராக வேண்டும் என்று வழக்கு ஒன்றை விசாரித்த மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி உத்தரவிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மு.க அழகிரி மதுரை திரும்பினார்.
மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திக்க மறுத்த அவர் தனது காரில் ஏறி புறப்பட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மேலூர் பகுதியில் அம்பலகாரன்பட்டியில் உள்ள வெள்ளநாடு கோயில் அருகே பிரச்சாரம் செய்தபோது, ஏற்பட்ட தகராறில் அப்பகுதி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் அழகிரி உட்பட திமுகவினர் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆஜராக அழகிரி மதுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.