மாணவர்கள் மீது தடியடி.. நீதி விசாரணைக்கு மறுத்த ஓபிஎஸ்.. வெளி நடப்பு செய்த திமுக
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து மு.க ஸ்டாலின் கேட்ட நீதி விசாரணைக்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வ
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அமைதியான அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதன் பின்னணி என்ன என்று ஆராய நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கோரினார். இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததையடுத்து மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்த மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரிய அளவில் நடந்தது. அதே போன்றதொரு போராட்டம் தற்போது நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக டெல்லி சென்று மோடியை சந்தித்துவிட்டு திரும்பிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 17ம் தேதி முதல் 22 தேதி வரை மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் என்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி சொல்லி பேட்டி அளித்த மறுநாளே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் ஏன் உருவானது?

பேசாத ஓபிஎஸ்
இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்ததற்கு என்ன காரணம்? ஓபிஎஸ் நேரடியாக மாணவர்களிடம் பேசி இருந்தால் இவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்காது. டெல்லிக்கும் மதுரைக்கும் விமானத்தில் பறக்கும் முதல்வர் பக்கத்திலேயே இருக்கும் மெரினா கடற்கரைக்குச் சென்று மாணவர்களிடம் பேசி இருக்கலாம். அப்படி பேசி இருந்தால் அமைதியாக போராட்டம் முடிவிற்கு வந்திருக்கும்.
தீ வைத்த பெண் போலீஸ்
அப்படி செய்யாததால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சமூக விரோத கும்பல் புகுந்துவிட்டதாக தமிழக அரசும், காவல்துறையும் கூறியுள்ளன. ஆனால், பெண் போலீசாரே குடிசைக்கு தீ வைத்ததும் ஆட்டோவிற்கு தீ வைத்தும் சமூக வலை தளங்களில் பரவியது. அதனை எல்லோரும் பார்த்தார்கள்.

ஜனாதிபதியிடம் மனு
போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்பட அனைத்தும் சேகரித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சகம், ஆளுநர், தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் என அனைவருக்கும் மனு அனுப்பி இருக்கிறோம்.

பழிவாங்கும் அரசு
இதுமட்மல்லாமல் நடுகுப்பம், மாட்டங்குப்பம் மீனவர்கள் அதிக அளவில் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் போராட்டக்காரர்களுக்கு தஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.

விசாரணைக்கு மறுப்பு
இதுபற்றிய உண்மை வெளியே வர வேண்டும் என்றால் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரினேன். அதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார்.

திமுக வெளிநடப்பு
இதனைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இது ஒரு அடையாள வெளிநடப்புதான். மீண்டும் நாங்கள் உள்ளே சென்று பேரவை விவாதத்தில் கலந்துகொள்வோம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications