சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடா? அதிமுக கட்சி மாநாடா? கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இல்லை.... அதிமுகவின் கட்சி மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநாடு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதை அடுத்து மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும், 2015 மே 23, 24ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வெப்பத்தைக் காரணம் காட்டி மாநாட்டை ஒத்திவைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஆட்சி முடியும் தருவாயில் இது போன்ற மாநாடு நடத்தினால் பயன் அளிக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக தமிழக அரசு ரூ.100 கோடி செலவிடுகிறது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடக்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சுமார் 3,500 தொழில் முதலீட்டாளர்கள் வர உள்ளனர். இதில், 1000 பேர் வெளிநாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.‘

விளம்பர பேனர்கள்
சென்னை நகர் முழுவதும் விளம்பர பேனர்களாக காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் முதல்வரின் போயஸ் கார்டன் இல்லம் உள்ள பின்னி சாலையில் மாநாடு குறித்த பிரமாண்டமான வகையில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.‘

சாலைகளில் பேனர்கள்
முதல்வர் இல்லத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நத்தம்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் அதிமுக கொடிகளும், முதல்வரை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் மத்தியில் உள்ள சென்டர் மீடியனும் விட்டு வைக்கவில்லை. அங்கும் முதல்வரை வரவேற்று அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கட்சிக்கொடிகள்
கத்திப்பாரா மேம்பாலத்தில் இருபுறம் மற்றும் சென்டர் மீடியனில் ஒரு அடிக்கு ஒரு கட்சி கொடி என்ற விதத்தில் பாலம் முழுவதும் ஆக்கிரமித்து அதிமுக கொடிகளாக காட்சியளிக்கிறது. மெட்ரோ ரயில் மேம்பால தூண்களிலும் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.

அதிமுக பேனர்கள்
முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து நத்தம்பாக்கம் வரை அதிமுக மாநாடு போல கட்சி கொடிகளாகவும், முதல்வரை வரவேற்று பேனர்களுமாக உள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் வரை காமராஜர் சாலை முழுவதும் இதே போன்றே பேனர்களாக காட்சியளிக்கிறது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை தியாகராய நகரில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இல்லை என்றும், அதிமுகவின் கட்சி மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications