எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் செல்வேன்... சொல்கிறார் மு.க.ஸ்டாலின்!
சென்னை: எம்ஜிஆரின் "ஒளிவிளக்கு' திரைப்படத்தை 3 முறை சைக்கிளில் சென்று பார்த்ததாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை கூடிய சட்டசபையில் மீன் வளம், பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தின சபாபதி பேசுகையில், 45 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு காத்திருப்போம். எம்ஜிஆர் நடித்த 'ஒளிவிளக்கு' படத்தில் இடம்பெற்ற "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க..." என்ற பாடலை பாடினார்.
அதில் இருவரும், "படி அரிசி கிடைக்கும் காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே' என்றெல்லாம் பாடியிருப்பர். இப்போது விலையில்லா அரிசி அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார். அதன் பிறகு, "ஊதாரி பிள்ளைகளை பெக்க மாட்டோம், அதை ஊர் வம்பு வாங்கும்படி வைக்க மாட்டோம்' என்ற வரியையும் ரத்தின சபாபதி குறிப்பிட்டார்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலையிட்டு, "அதிமுக உறுப்பினர், ஊதாரிப்பிள்ளைகளை பற்றிதான் சொல்கிறார்" என்று கூறி, உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார், " எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்போதுதான் இந்தப்படம் வெளிவந்தது" என்றார். உடனே மு.க.ஸ்டாலின், எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக இருந்தபோது வந்த திரைப்படம் ஒளிவிளக்கு. அந்தப் படத்தில் திமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் எம்ஜிஆர் நடித்தார். நானே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று அந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications