ஆகஸ்ட் 12.... கன்னியாகுமரியில் தொண்டர்களைச் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவில்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 12ம் தேதி கன்னியாகுமரியில் அந்த மாவட்ட திமுகவினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
மு.க. ஸ்டாலின், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி, வருகிற 12-ந்தேதி அவர் குமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி மாலை 6 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாளான 12-ந்தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள உடுப்பி ஓட்டலுக்கு வருகிறார். அங்கு நடைபெறும் கட்சி நிர்வாகிகளின் குழு விவாதத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதில் ஒவ்வொரு அணியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 25 பேர் மட்டும் கலந்து கொள்வார்கள்.
முதலில் காலை 10 மணி முதல் 10.45 மணி வரை மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி பிரதிநிதிகள், 10.45 மணி முதல் 11.25 மணி வரை மகளிரணி, 11.30 முதல் 12.15 மணி வரை கிளைச்செயலாளர்கள், 12.15 மணி முதல் 1 மணி வரை பூத் ஏஜெண்டுகள், 1 மணி முதல் 1.45 மணி வரை பதவியில் இல்லாத மூத்த கட்சியினரும் குழு விவாதம் நடைபெறுகிறது.
பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பிரதிநிதிகள், 4 மணி முதல் 5 மணி வரை மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. முக்கியஸ்தர்களுடன் குழு விவாதம் நடக்கிறது.
மாலை 5.30க்கு பிறகு நாகர்கோவில் பைரவி திருமண மண்டபத்தில் கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை மற்றும் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் உடுப்பி ஓட்டலில் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள முடியாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்றார்.