'ஒருவழியாக' கருணாநிதி பாணி அரசியலை கையிலெடுத்த ஸ்டாலின்.. சரண்டர் ஆன தமிழக அரசு! திமுகவினர் குஷி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வால் ஓய்வில் இருந்தபோதும், தமிழக அரசியல் எங்கோ ஒரு மூலையில் இன்னும் அவரை சுற்றிதான் இயங்குகிறது. ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ இன்றும் கோபாலபுரம் இல்லத்தில் காலடி எடுத்து வைக்காமல் அரசியலில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை.
கருணாநிதி இப்போவே இப்படீன்னா, ஆக்டிவ் பாலிடிக்ஸ்சில் இருந்தபோது தமிழக அரசியல் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.
கட்சியின் சின்னத்தை போலவே கருணாநிதியும் சூரியனாக காட்சியளித்தார். தமிழக அரசியல் எனும் கோள்கள், அந்த சூரியனை மட்டுமே சுற்றி வந்தன.
நடுநாயகம்
முதல்வராக இருந்தபோதிலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அவ்வளவு ஏன், எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிகவிடம் பறி கொடுத்துவிட்டு, 3வது பெரிய கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் இருந்தபோதிலும், எப்போதுமே கருணாநிதியின் நாயகத்தன்மைக்கு எந்த குறையும் வந்தது கிடையாது. இதற்கு முக்கிய காரணம், அரசியல்வாதியாக மட்டுமின்றி, அவரே, அரசியலின் அஜென்டாவை உருவாக்குபவராக இருந்தார்.
அரசை பதில் சொல்ல வைப்பார்
பிரச்சினைகளை வெளியே கொண்டுவந்து, அரசை அதற்கு 'ரியாக்ட்' செய்ய வைப்பார் கருணாநிதி. ஜெயலலிதா தலைமையிலான அரசின் மூவ்களுக்கு ரிப்ளே செய்பவராக மட்டுமின்றி, இவரது மூவ்களுக்கு ஜெயலலிதாவை பதில் சொல்ல வைத்தார். எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தபோதிலும், செய்திகளில் தினமும் பேசப்பட்டவர் கருணாநிதிதான் என்பதில் இருந்தே அவரது நகர்வுகளின் வீரியத்தை உணர முடியும்.
கருணாநிதி அறிக்கை போர்
கருணாநிதியின் கேள்வி பதில் வடிவிலான அறிக்கைக்கு ஜெயலலிதாவால் பதில் அறிக்கைவிட முடியாமல் இருந்ததில்லை. ஒருவேளை அப்படி ஜெயலலிதா செய்யவில்லை என்றாலும், "பார்த்தீர்களா, விளக்கம் கூட கொடுக்க முடியாதபடி வகையாக தப்பு செய்து சிக்கியுள்ளார்" என்று மற்றொரு பதில் அறிக்கையையும் வெளியிடுவார் கருணாநிதி. அவரது ஆளுமைக்கு தேசிய அரசியலில் இருந்த முக்கியத்துவம் அவரது அறிக்கைகளை நாடு முழுவதிலும் உள்ள ஊடகங்களுக்கும் கொண்டு சேர்த்து, அரசுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வந்தது.
கருணாநிதியை மிஸ் செய்தனர்
ஆனால், ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, அரசியல் நகர்வுகள், தினகரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று மட்டுமல்ல, தீபாவை கூட சுற்றி வந்ததே தவிர ஸ்டாலினை மட்டுமே அது சுற்றி வரவில்லை. இந்த இடத்தில்தான் கருணாநிதியை தாங்கள் மிஸ் செய்வதாக ஆதங்கம் வெளிப்படுத்தினர் உடன்பிறப்புகள். ஸ்டாலின் தெம்பாக இருக்கும்போதே, தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக ஆளாளுக்கு கருத்து கூற காரணம் இதுதான் என்பது திமுகவினர் ஆதங்கம்.
சிறப்பான மூவ்
ஆனால், வெகு காலத்திற்கு பிறகு இன்று திமுக அரசுக்கு அஜெண்டாவை செட் செய்து கொடுத்துள்ளது. அதுவும் உணர்ச்சிகரமான காவிரி விவகாரத்தில் அது நடந்துள்ளது திமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வரும் 23ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதாக ஸ்டாலின் அறிவிக்க, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என புரியாத ஆளும் தரப்பினர், திடீரென 22ம் தேதியே அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஜெயலலிதா காலம் தொட்டே, அனைத்து கட்சி கூட்டம் என்றாலே ஆளைவிடுங்க என ஓடிக்கொண்டிருந்த அதிமுக இன்று இறங்கி வந்துள்ளது. காரணம் திமுக. இதை ஒரு சிறப்பான மூவ் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கருணாநிதி பாணி அரசியலை ஸ்டாலின் தொடர்ந்து, கையில் எடுத்தால் அரசியல் வெற்றிடம் என்ற வார்த்தை ஜாலம் இனி ஓயும் என்று பூரிக்கிறார்கள் திமுகவினர்.