கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்து விட்டு அரசியல் செய்கிறார் ஸ்டாலின்... மதுசூதனன் பாய்ச்சல்
கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்து விட்டு அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்பது அழகிரியின் குற்றச்சாட்டு. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்கிறார் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ் இந்து நாளிதழுக்கு மதுசூதனன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்.ஸையும் இணைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளது தேவையில்லாத குற்றச்சாட்டு. அப்படிப் பார்த்தால் எனக்குக்கூட ஒரு சந்தேகம் இருக்கிறது.
கருணாநிதி நிலைமை என்ன?
கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்.
எல்லாமே நாடகம்
மைல் கற்களில் இந்தியில் பெயர் எழுதுவதற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எல்லாம் நாடகம். கருணாநிதி குடும்பத்தில் இந்தி தெரியாதவர் யாரும் இல்லை.
திமுகவின் திட்டம்தான்
இப்போது மைல்கற்களில் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்களே, அன்று திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோதுதானே இந்தத் திட்டமே வகுக்கப்பட்டது.
தேர்தல் வரும்போதுதான்...
அப்போது ஜெயலலிதா, பிரதமருக்கு இதுகுறித்து ஒரு கண்டன கடிதத்தை அனுப்பினார். தேர்தல் வரும்போது இவர்கள் இந்தி எதிர்ப்பை கையிலெடுக்கிறார்கள்.
இவ்வாறு மதுசூதனன் கூறியுள்ளார்.