'சூழ்நிலை மாறியுள்ளது'.. நளினி பரோல் வழக்கில் ஹைகோர்ட்டில் தமிழக அரசு கருத்து!
சென்னை: நளினி விவகாரத்தில் தற்போதைய சூழ்நிலை மாறியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தையை உடன் இருந்து கவனிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவிற்கு கடந்த சிலவாரங்களுக்கு முன்பு பதில் அளித்த தமிழக அரசு, நளினியை பரோலில் விட்டால் சட்டம்- ஒழுங்கு சீரடையும் என்று கூறியிருந்தது.

இதனிடையே, நளினி உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடை பெற்றது.
இந்நிலையில், நளினி பரோல் கேட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், நளினி விவகாரத்தில் தற்போதைய சூழ்நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நளினி உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பரோல் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications