மீண்டும் மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு... ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
சென்னை: மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறது. இந்த சம்பவத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி, மறுவிசாரணை கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
2007ஆம் ஆண்டு தினகரன் நாளிதழில் தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என ஒரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஸ்டாலின், கனிமொழியை விட மு.க. அழகிரிக்கு மிகக் குறைவான ஆதரவே உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரி ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர். இதில் தினகரன் அலுவலக லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து தி.மு.க.வைச் சேர்ந்த அட்டாக் பாண்டி உட்பட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையுமே சி.பி.ஐ. நீதிமன்றம் விடுதலை செய்தது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதலே இவ்வழக்கு மீண்டும் உயிர்பெறும் எனக் கூறப்பட்டது. இதனிடையே உயிரோடு எரிக்கப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடியும் மறுவிசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இத்தனை ஆண்டுகாலம் கிடப்பில் இருந்த இந்த மனு தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.