ஆர்.கே. நகரில் ஜெ. வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு- பதிலளிக்க நோட்டீஸ்!
சென்னை: சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவின் சிம்லா முத்துசோழன் போட்டியிட்டார்.

இத்தேர்தலில் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். திமுகவின் சிம்லா முத்துசோழனுக்கு 57, 673 வாக்குகள் கிடைத்தன. இதனால் ஜெயலலிதா 39, 545 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
தற்போது ஆர்கே நகர் தொகுதி வாக்காளரான பிரவீணா என்பவர் ஜெயலலிதாவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தேர்தலின்போது அரசு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டனர். பல வாக்குச் சாவடிகளை ஆளும் கட்சியினர் கைப்பற்றி விட்டனர். இந்த தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே, ஆர்.கே.தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.
இந்த தொகுதிக்கு மறு தேர்தல் நடத்தக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.துரைசாமி 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 16ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
திருமாவளவன் வழக்கு...
அதேபோல, தேர்தலில் காட்டு மன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.துரைசாமி, மனுவுக்கு 4 வாரத்துககுள் பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. வேட்பாளர் முருகுமாறன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த வழக்கையும் வருகிற செப்டம்பர் 16 ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications