ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது... ஹைகோர்ட் மறுப்பு!
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை : 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் 21-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும் முயன்றனர். இதனையடுத்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த தடை கோரி வழக்கறிஞர் நயினா முகமது வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வேலை செய்யும் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ஹைகோர்ட் தலையிடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஜாக்மோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஹைகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications