விஜயகாந்தை குண்டாஸில் கைது செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராமன் அதிமுக பிரமுகரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய விஜயகாந்த், தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை ஆவதூறாக பேசியதோடு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டார். அதேபோல தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் முதல்வரை விமர்சிப்பதும், சட்டம் ஒழுஙகு பிரச்சனையை ஏற்படுத்துவதுமாக விஜயகாந்த் பேசி வருகிறார்.
எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை விஜயகாந்த் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அதனை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட விஜயகாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அவர் மீது ஏற்கனவே பல்வேறு அவதூறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சாவூர் காவல்துறைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு செவ்வாய் அல்லது புதன் அன்று நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.