கட்சி அலுவலகம் கட்ட ரூ.13 கோடி கடன்: இ.கம்யூனிஸ்ட் தா.பாண்டியனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கட்சி அலுவலகம் கட்ட வங்கியில் ரூ.13 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு வங்கிக் கடன் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடலூர் அருகே உள்ள கொண்டூரைச் சேர்ந்த பி.ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கவுன்சில், சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் 10 கிரவுண்ட் இடத்தை வாங்கியது. அங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன் அளித்த பரிந்துரையை மாநிலக் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
கட்டிடத்துக்காக நிதியும் திரட்டப்பட்டது. கடலூர் மாவட்டம் சார்பில் ரூ.2 லட்சம் கொடுத்தோம். ஆனால், மாநிலக் கவுன்சிலுக்கு தெரியாமல் கட்சியின் சொத்து ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து 13.5 சதவீத வட்டிக்கு ரூ.13 கோடியை கடனாக தா.பாண்டியன் வாங்கியது தெரியவந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி வழக்கு தொடர்ந்திருப்பது பத்திரிகை மூலம் தெரியவந்தது.
கட்சியின் அலுவலக கட்டுமானச் செலவு ரூ.7.5 கோடிக்குமேல் இருக்காது. கட்சியின் சொத்தை அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு தா.பாண்டியனுக்கு அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும்போது வங்கி அதிகாரிகள் எப்படி கடன் கொடுத்தனர்? இது சட்டவிரோதமாகும். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் நோட்டீஸ்
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அய்யாத்துரை ஆஜரானார். தா.பாண்டியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், வங்கியின் ஊழல் தடுப்புப்பிரிவு தலைமை மேலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications