சேவல் சண்டைக்கு தடை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: சேவல் சண்டைக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள கோவில்களின் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி, பிராணிகளை துன்புறுத்தி, மக்கள் மகிழ்ச்சி அடைவதை ஏற்க முடியாது. எனவே, சேவல் சண்டைக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சேவல்சண்டை
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்து நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலம்.

ஆடுகளம் திரைப்படம்
இதை வைத்து தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அது தேசிய விருதும் பெற்றது. அதுமுதல் தமிழகத்தில் சேவல்சண்டையை இயக்குநர் வெற்றிமாறன்தான் பல இடங்களில் துவக்கி வைக்கிறார்.

சண்டைச் சேவல்
சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டைசேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன. போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்தசேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது.

இருவர் மரணம்
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காலில் கத்தியை கட்டி விளையாட விட்ட சேவல் சண்டை போட்டியில் கழுத்தில் கத்தி பாய்ந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சேவல்சண்டை நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

உயர்நீதிமன்றம் தடை
கடந்த சில ஆண்டுகளாக இந்த போட்டியில் சிலர் சேவலின் காலில் கத்தியைக் கட்டி போட்டிகள் நடத்தியதால், போட்டியில் பங்கேற்ற சேவல்களில் தோற்றுப்போகும் சேவல்கள் இறந்தன. சில சேவல்களின் கால்களில் விஷம் தடவிய கத்திகளையும் ஒரு சிலர் பயன்படுத்தினர். இதனால், இப்போட்டிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கலெக்டர் உத்தரவு
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சசிகுமார் (37), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி (30) ஆகிய இருவர் மீது சேவலின் காலில் இருந்த கத்தி குத்தி கிழித்ததில் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் சேவல்கட்டு போட்டி நடத்த தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி உத்தரவு பிறப்பித்தார்.

சேவல் சண்டை நடத்த தடை
இந்த நிலையில் சேவல் சண்டைக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications