மாணவிகள் மீது ஆசிட் வீச்சு எதிரொலி: மதுரையில் 200 லிட்டர் ஆசிட் பறிமுதல்
மதுரை: திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 200 லிட்டர் ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்து வரும் மீனா மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகிய மாணவிகள், கடந்த 12ம் தேதி பிற்பகல் மர்ம நபர்களால் ஆசிட் வீச்சுக்கு தாக்குதலுக்கு ஆளானார்கள்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவிகள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக முக்கியக் குற்றவாளி ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆசிட் விற்பனை குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தாசில்தார் பாலசுப்ரமணியன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், திருமங்கலம் பகுதியில் சுமார் 130 லிட்டர் ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மதுரையின் பிற பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த ஆசிட் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ஆசிட்டின் அளவு சுமார் 200 லிட்டரைத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications