அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தை கோமாளியகாவே பார்க்கிறேன்: ராம. கோபாலன்
கோவை: அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தை ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த தேர்தல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றிவிட்டு மோடியை பிரதமர் ஆக்க இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாடுபடுகிறார்கள்.
இந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. இந்துக்களுக்கு ஆதரவான அரசு மத்தியிலும், மாநிலத்திலும் அமைய வேண்டும் என்று இந்து முன்னணி பாடுபடுகிறது. மத்திய-மாநில அரசுகள் பெரும்பான்மை மக்களான இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.
மோடி பிரதமர் ஆனால் நாட்டை முன்னேற்றுவார். அதனால் மோடிக்கு வாக்களிக்குமாறு வீடு, வீடாக சென்று மக்களை கேட்கவிருக்கிறோம். அனைவரும் மோடிக்கு வாக்களித்து அவரை பிரதமர் ஆக்க வேண்டும். மோடியின் மனைவி பற்றி சிலர் விமர்சித்து வருகிறார்கள். சில பெரிய தலைவர்கள் செய்யும் தவறுகள் பற்றிய புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் வெளியிட வேண்டியது இல்லை அது தானாகவே வெளிவரும்.
தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பாஜக எப்பொழுதுமே ஆதரவாக இருக்கும். அப்படி பாஜக இதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதை முதலில் நாங்கள் தான் எதிர்ப்போம்.
கோவில் நிலங்கள் 6 லட்சம் ஹெக்டேர் பயன் இல்லாமல் உள்ளது. அதனால் அரசு கோவிலை ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மடாதிபதிகள். இந்து முன்னணி போன்ற சமுதாய அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த பிரச்சனை தீரும் என்று நினைக்கிறேன்.
மதுரை ஆதீனம் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை நான் ஒரு கோமாளியாகவே பார்க்கிறேன். அவர் தனிப்பட்ட முறையில் பேசியபோதே யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. தற்போது மட்டும் அவரது ஆதரவுக்கு என்ன மதிப்பும், மரியாதையும் இருக்கும் என்று தெரியவில்லை. அவர் ஆதீனத்தின் மதிப்பை கொச்சைபடுத்திவிட்டார் என்றார்.