கருணாநிதி பேசிய அதே இடத்தில்.. ஆதீனமும்!
மதுரை: மதுரையில் கடந்த 13ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்து பேசிய அதே இடத்தில் கூட்டம் போடச் சொல்லி மதுரை ஆதீனமும் இன்று இரவு 7 மணிக்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்து பேசப் போகிறார்.
அதிமுகவின் கொள்கைப் பரப்பு பீரங்கிகளுக்கு இணையாக முழக்கமிட்டு வருகிறார் மதுரை ஆதீனம். அதிமுக பேச்சாளர்களை விட இவர்தான் சத்து சாரத்தோடு சலசலப்பாக பேசி வருகிறார்.
முன்னொரு காலத்தில் தீப்பொறி ஆறுமுகம் என்ற பேச்சாளருக்கு மதுரையில் செமத்தியாக கூட்டம் கூடும். அவரது பேச்சு வீச்சு அப்படி .. அவரைப் போல மதுரை ஆதீனம் சாமி பேசுவதில்லை என்றாலும் கூட ஆதீனம் பேசும் விதம், ஸ்டைல், உரை வீச்சு.. உற்சாகப் பேச்சுக்காகே இப்போது கூட்டம் கூட ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், இன்று இரவு 7 மணிக்கு ஓபுளா படித்துரையில் ஆதீனம் பேசப் போகிறார். அந்தப் பேச்சின்போது அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் உடன் இருக்கப் போகிறார்கள்.
இதே இடத்தில்தான் கடந்த 13ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்து பேசினார். அதே இடத்தையே தேர்வு செய்து கூட்டம் போட்டுள்ளனர் அதிமுகவினரும்.
மதுரை மக்கள் ஆதீனத்தின் அதிமுக பேச்சைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறார்களாம்.