பிப்ரவரி 5ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: ஊர் விழாக் கமிட்டி அறிவிப்பு
பிப்ரவரி 5ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் விழாக்கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். ஊர் விழாக் கமிட்டியினர் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மதுரை: அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்றத் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் பிறப்பித்தது. அதனை தமிழக சட்டசபையில் நேற்று சட்டமாகவும் நிறைவேற்றியது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மதுரை அவனியாபுத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் கிராம விழா கமிட்டியினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரிலும் பிப்ரவரி 2ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications