மீனாட்சி கோவிலில் இன்னொரு தீ விபத்து ஏற்படக்கூடாது..... கள ஆய்வு செய்யும் பிடிஆர் தியாகராஜன்
மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இன்னொரு தீ விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே தீவிர கள ஆய்வு நடத்த உள்ளதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
Recommended Video

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து குறித்து கள ஆய்வு நடத்த உள்ளதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்லாது நெருக்கடி மிகுந்த புதுமண்டபம் பகுதியிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர் பிடி ராஜனின் பேரன், முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் ராஜனின் மகன் என பாரம்பரிய அடையாளங்களோடு மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், உலக முன்னணி நிறுவனங்களின் நிதி ஆலோசகர் என பல நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் பிடிஆர் தியாகராஜன்.
மீனாட்சி அம்மன் கோவிலில் நிகழ்ந்த தீ விபத்து அவரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல முடியாத நிலையில் மதுரையில் உள்ள கட்சி நிர்வாகிகள் மூலம் அறிக்கைகளை கேட்டு ஆய்வு செய்து வருகிறார். யாருமே எதிர்பாராத வகையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டது அடுத்தது என்ன என்று ஆய்வு செய்து இனியொரு சம்பவம் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திலோ சுற்றுப்புறப்பகுதிகளிலோ நடைபெறாமல் தடுப்பதே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார் எம்எல்ஏ தியாகராஜன். ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

எதிர்பாராத விபத்து
மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த போது சென்னையில் இருந்தேன். உடனடியாக மதுரை செல்ல முடியாத சூழ்நிலை என்றாலும், எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியுள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நான் சென்றிருந்தால் கூட ஏதோ சம்பிரதாயத்திற்காக செல்வது போல இருந்திருக்கும். என்னுடன் கட்சி நிர்வாகிகளும் வருவார்கள். எம்எல்ஏவாக எனக்கு பாதுகாப்பு கொடுக்க தனியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவேதான் இனி நடக்க இருக்கும் சம்பவங்களை பார்க்க வேண்டும்.

திமுக நிர்வாகிகள்
நிமிடத்திற்கு நிமிடம் அங்கு நடந்த சம்பவங்களை தொலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தோம். தீ விபத்தினால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல் தெரிந்தது. இன்று காலையில் மாவட்ட செயலாளர் தலைமையில் குழுவினர் அலுவலக ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள், முன்னாள் துணை மேயர் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்புகின்றனர்.

விபத்து மேலாண்மை
அதன் அடிப்படையில் நான் காலையில் மதுரைக்கு சென்று ஆய்வு நடத்துவேன். இனிமேல் மதுரையில் குறிப்பாக நெருக்கடி மிகுந்த மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீ விபத்து நேராமல் என்ன செய்வது என்று ஆய்வு செய்வேன். நேற்று நடந்த தீ விபத்தின் போது தீயை அணைக்க சில மணிநேரங்கள் ஆனது ஏன்? விபத்து மேலாண்மை திட்டங்கள் சரியாக செயல்பட்டதா என்று ஆய்வு நடத்த வேண்டியுள்ளது.

கள ஆய்வு
கோவிலுக்கு உள்ளேயும், கோவிலை சுற்றியும் உள்ள நெருக்கடியான கடைகளை கடைகளை அப்புறப்படுத்துவதா? வேறு இடத்துக்கு மாற்றுவதா என்று ஆய்வு செய்வேண்டியுள்ளது. தீ விபத்து நடந்து விட்டது. டெக்னிக்கலாக ஆய்வு நடத்தி இனி இது போல நடக்காமல் இருக்க திட்டமிட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.












Click it and Unblock the Notifications