குஷ்புவின் விஷமப் பேச்சை எதிர்த்து வழக்கு.. திருநங்கையரிடம் கோர்ட் விசாரணை
மதுரை: நடிகை குஷ்பு திருநங்கைகள் குறித்துப் பேசியதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், மதுரை கோர்ட்டில் திருநங்கையரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
மதுரையைச் சேர்ந்தவர் திருநங்கை பாரதி கண்ணம்மா. இவர் மதுரை 4வது நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் ஏப்ரல் 2ம் தேதி ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அதில், திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் உடனடியாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. ஆக ஆசைப்படுகிறார்கள் என்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக கூறி இருக்கிறார்.
இந்தியாவில் உள்ள திருநங்கைகளில் நான் மட்டுமே எம்.பி. தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட வேட்பாளர். என்னை சுட்டிக்காட்டியே இந்த பேட்டியை குஷ்பு கூறியிருக்கிறார். திருநங்கைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வாக்குகள் பெறக்கூடாது என்ற உட்கருத்துடன், அரசியல் கட்சியின் தூண்டுதலின்பேரில் அவர் பேசியிருக்கிறார்.
எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 499, 500, 501, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனை வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாரதிகண்ணம்மா, அனுசுயா உள்பட சில திருநங்கைகளிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications