நல்ல புருஷனைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள், சூப்பர்மேனை அல்ல.. நீதிபதியின் நெத்தியடி கருத்து
பெண்கள் எப்போதுமே நல்ல புருஷனைத்தான் எதிர்பார்க்கிறார்கள், சூப்பர்மேனை அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
மதுரை: பெண்களைப் பொறுத்தவரை நல்ல கணவனாக இருக்க வேண்டும்தான் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, சூப்பர்மேனை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட போலீஸார், திருச்சி மருங்காபுரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் மீது பெண்ணைக் கடத்தியதாக வழக்குப் போட்டனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் மனு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி அப்போது சில கருத்துக்களை வைத்தார். அப்போது திருமண வாழ்வு, பெண்களின் எதிர்பார்ப்பு, கணவர்களின் கடமை ஆகியவை குறித்து அழகாக எடுத்துரைத்தார் நீதிபதி. நீதிபதியின் உத்தரவு...
நீதிபோதனைகள் எதற்காக?
ஒருவருக்கொருவர் மதிப்பளித்து உறவை மேம்படுத்தவே நீதிபோதனைகள் கூறப்படுகின்றன. எது சரி, எது தவறு என்று அறிந்து ஒவ்வொருவரும் அவரவர் குணநலன்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பற்ற செயலால் சிதைந்த குடும்பம்
இந்த வழக்கில் திருமணமான பெண், சட்டவிரோத உறவு வைத்துக்கொண்ட மனுதாரருடன் தனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் அந்த பெண்ணின் குடும்பம் சிதைந்துள்ளது. அந்த பெண்ணை ஆஜர்படுத்தக்கோரி அவரது கணவர் ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் கூறியதால் அந்த மனு முடித்து வைக்கப்பட்டதாக மனுதாரர் வக்கீல் தெரிவித்துள்ளார்.
வெட்கம் இல்லாமல்
இந்த வழக்கு விசாரணையின்போதும் அதுபோலத்தான் அவர் வெட்கம் இல்லாமல் கூறினார். சினிமா பாணியில் கோர்ட் செயல்பட இயலாது. இதற்கு முன்பு வரை விசாரணைக்கு ஆஜரான மனுதாரர் இப்போது ஆஜராகவில்லை. இதிலிருந்து அவர் இந்த பெண்ணுடனான உறவை தொடர விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனை அறிந்த இந்த பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
நல்ல கணவராக இருங்கள்
ஒரு பெண்ணுக்கு சூப்பர்மேன் தான் வேண்டும் என்பதில்லை. நல்ல கணவன் அமைந்தாலே போதும். இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைத்திருந்த போதும், அந்த பெண்ணின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. மனுதாரர் ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி உள்ளார். அவரால் திருமணமான பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினாலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார் நீதிபதி.