விஜயகாந்த்துக்கு தஞ்சாவூர் பேனர் கிழிப்பு வழக்கில் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: தஞ்சாவூரில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேனர் கிழிக்கப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தே.மு.தி.க. சார்பில் தஞ்சாவூர் ரயிலடி தபால் நிலையம் அருகே கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் கிழித்து எரிந்தனர்.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி எம்.ரங்கசாமி, தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே இந்த வழக்கில் விஜயகாந்தை கைது செய்ய நாளை வரை தடை இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலாயுதன் விஜயகாந்த் உத்தரவின் பேரிலேயே பேனர் கிழிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி பிரகாஷ், "இது அரசியல் விவகாரம். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலமாக சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், விஜயகாந்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள தேவையில்லை. எனவே விஜயகாந்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்குகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications