விவாகரத்துக்கு மறுத்த மனைவி மீது ஆசிட் வீச்சு- கணவர் உட்பட 2 பேர் கைது... மதுரையில் பயங்கரம்
மதுரை: மதுரை அருகே விவாகரத்து தர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் மற்றும் அவரது அண்ணன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் செல்வம் (34). இவரது மனைவி காளீஸ்வரி (27). திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆன இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக செல்வம் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். காளீஸ்வரி தனது 2 குழந்தைகளுடன், தனக்கன்குளத்தில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்களது விவாகரத்து வழக்கு மதுரை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால், காளீஸ்வரி விவாகரத்து தர மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், காளீஸ்வரி மீது செல்வம் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை காளீஸ்வரி தனது குழந்தைகளை டியூசனில் இருந்து அழைத்துக் கொண்டு தனக்கன்குளம் மந்தை அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வம் தனது அண்ணன் திருவேட்டையை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அந்த வழியே வந்துள்ளார். நடந்து வந்து கொண்டிருந்த காளீஸ்வரியிடம் அவர்கள் இருவரும் தகராறு செய்துள்ளனர்.
அப்போது திருவேட்டை மறைத்து வைத்திருந்த பாட்டில் இருந்த ஆசிட்டை காளீஸ்வரி மீது ஊற்றியுள்ளார். சுதாரித்துக் கொண்ட காளீஸ்வரி விலகி நின்றதால், அவரது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் ஆசிட் பட்டு காயமேற்பட்டது. எரிச்சல் தாங்காமல் அலறிய காளீஸ்வரியை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள்ளாக, செல்வமும், திருவேட்டையும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் காளீஸ்வரி புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் திருவேட்டை ஆசிட் வீசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து செல்வம் மற்றும் திருவேட்டைக் கைது செய்த போலீசார், அவர்களைத் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், இருவரையும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications