'அழகிரியின் அன்புத் தம்பிகள்' மீது திமுக புகார் - போலீஸ் வழக்கு!
மதுரை: அழகிரியின் அன்புத் தம்பிகள் என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மதுரை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட வக்கீல் வேலுச்சாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அழகிரி ஆதரவாளர்கள் மீது திமுக சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பிரமுகர்கள் பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி ஆகியோர் மு.க.அழகிரியை பகிரங்கமாக விமரிசித்துப் பேசியது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக பிரமுகர்கள் விமரிசனத்துக்கு அழகிரி இதுவரை பதில் கூறவில்லை. இந்த நிலையில், அழகிரியின் ஆதரவாளர்கள் திடீரென போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் பொன்.முத்துராமலிங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். போஸ்டரில் அழகிரியின் அன்புத்தம்பிகள் என்றிருந்ததே தவிர, அச்சடித்த அச்சகப் பெயரோ, அழகிரி ஆதரவாளர்கள் பெயரோ இல்லை.
இந்தப் போஸ்டர் குறித்தும் அதை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திமுக மாநகர் மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் சு.கருணாநிதி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், தெப்பக்குளம், விளக்குத்தூண், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையங்களில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications